7 November 2012

நடைபிணங்கள்



பசிக்கான உணவு; தேடலுக்கான கல்வி
உரிமைக்கு உலை வைக்காத அரசியல்
விலை பேசி விடாத வளர்ச்சி
சாதியில்லா சமூகம்; இருட்டிலிருந்து வெளிச்சம்;
விளைச்சலுக்கு தண்ணீர் – என
அத்தனைக்கும் போராடுகிற தேசத்திலிருந்து
தேசத்திற்காய் போராடிய உங்களுக்கு
உதவாமல் போனது எங்களின் இயலாமை தான்
ஆனாலும் செத்துப்போனது முத்துக்குமார் மட்டுமல்ல
நாங்களும் தான்.. இப்போது நடைபிணங்கள் அவ்வளவே...

4 November 2012

எழுது பொருள்

பேனாவுக்கும் உனக்குமான வேறுபாட்டை
இப்படி சொல்லிவிட முடியும்.....
பேனாஎன் எழுது பொருள்
நீநான் எழுதும் பொருள்!!!

கிழிந்த பக்கங்கள்



நீ கிழித்துவிட்டுப் போனதாய் சொல்லப்படுகிற
என் வாழ்வின் சில பக்கங்களை உன் நினைவுகளால்
இட்டு நிரப்புவதே என் சமீபகால எழுத்தின் நோக்கமாய் இருக்க,
இதையும் கூட கிழிந்த பக்கங்களென சொல்லிவிடக்கூடும் சிலர்எனில்
எது செய்தும் ஏற்றுக்கொள்ள முடியாத
மூன்றாம் தர புத்தகமாய் இருப்பதை விட,
சில சமரசங்களோடு ஒட்டிவிட முடிகிற
கிழிந்த புத்தகமாய் இருந்து விட்டுப் போகட்டும் என் வாழ்வு!!!!

27 October 2012

நன்றி

ஊதியம் வாங்குகிற ஏழாம் தேதிக்கு முன் வருகிற என் அப்பாவின் அழைப்பிற்கு அடுத்த நாள் மணியார்டர் செய்யப்பட்டிருக்கும் என் ஒரு மாத சம்பளம்....

அப்படி அகப்பட்டுக் கொண்ட ஒரு மாதத்தில் கட்டப்பட வேண்டிய கல்லூரிக் கட்டணம் கவலையைத் தர நீ நோட்டுப் புத்தகத்தில் மறைத்துத் தந்த மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் சிந்தியது என் கண்ணீர் மட்டுமல்ல நன்றியும் தான்....

23 October 2012

கனவு மெய்ப்பட...



மாத சம்பளத்திற்கு மடி ஏந்தும் நிலை மாறும்போது
என் கனவுகளுக்கு கால் முளைத்திருக்கும்.

புலம்பல்ஸ்


இரவின் மடியில் உலகம் உறங்கும் வேளை நான் விழித்துக்கொள்கிறேன்
இயற்கையோடு சண்டையிட்டே வாழ்ந்து தொலைக்கிறேன்
என் பகலெல்லாம் இருண்டு போகுது ஒன்னும் புரியலை
இன்னும் எத்தனை இரவுகள் இப்படி நீளும் அய்யோ தெரியலை...